குறு நகை கண்டால்...

"ஒரு சிரி கண்டால்" எனும் மலையாளப் பாட்டின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள் :

ஆண் :

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…

கார்கால மேகம்… கருஞ் சாந்தள்ளிப் போகும்
தலையாட்டி நீள்கூந்தல் உலரும் நேரம்… ஹோய்…
வெயில் காயும்நேரம் சுட்டெரிக்கும் தீச்சூர்யன்
சிறுவிழிச் சூட்டினில் உருகுவதேன் கண்ணே
நதியினில் மீனென அலைகிற பெண்ணுடன் சேர்ந்தாடும் நீரும்
பொழிகிற மழையினில் நனைகிற உன்னுடன் கூத்தாடும் வானும்
உலகே வந்து கொஞ்சுமோ… உயிரில் வந்த ஓவியம்

பெண்:

கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே
புயல்வெளி காற்றைப் போல் நாணம் தடுக்கிறதே
அந்தியில் பூத்ததும் காற்றுடன் கலக்கிற பூமணம் போலே
இரவினில் தனியென நிலவுடன் மொழிகிற ஆகாயம் போலே
கனவில் வந்து சொல்லுவேன்… நனவில் கொண்ட காதலை

மலையாளப் பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

பதிவர்களில் பாடகர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பாடலின் karoake அனுப்புகிறேன். முடிந்தால் பாடித் தாருங்கள் :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->